புலம்பெயர்ந்த தமிழர்களின் மொழியும் கலாசாரமும்


பிரான்சில் வசிக்கும் ஏ.முருகையன் என்ற ஆராய்ச்சியாளர் புலம்பெயர்ந்த தமிழ்த் தொழிலாளர்களின் மொழி், கலாசாரம், வாழ்க்கை பற்றி பேசியதின் எழுத்து வடிவம் இது.

''19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகெங்கும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் முயற்சி நடந்தது. அதனால் தோட்டத் தொழிலாளிகளின் தேவை ஏற்பட்டது. தோட்ட முதலாளிகள் இந்தியாவிலோ, சீனாவிலோ குறைந்த செலவில் தொழிலாளிகளை பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜி தீவு, மொரிஷியஸ், ரீயூனியன் தீவு, மர்த்தினி, தென் ஆப்பிரிக்கா மற்றும் உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தார்கள். இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் அரசாங்கம்தான் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பலாம் என்ற சட்டத்தை உருவாக்கினார்கள். ஆங்கில, பிரெஞ்சு பகுதிகளுக்கும் தோட்டத் தொழிலாளிகள் கொண்டுசெல்லப்பட்டனர். தமிழ்நாட்டிலிருந்தும் அப்படிதான் புலம்பெயர்ந்தார்கள்.
15 ஆண்டுகாலமாக பிரெஞ்சு பகுதிகளிலுள்ள தமிழர் வாழ்க்கை முறை பற்றி ஆராய்ந்து வருகிறேன். பிரெஞ்சு பகுதிகளிலுள்ள தமிழர்களின் மொழி, பண்பாடு பற்றி அறிய, தமிழர் வாழும் மற்ற நாடுகளில் எப்படி இருந்தது என்றும் அறிய வேண்டும்.
இந்தியாவிலிருந்து 2 வித சூழ்நிலையுள்ள நாடுகளுக்குப் பிரிகிறார்கள். தூரம் இதில் முக்கிய விஷயம். இந்தியா - சிங்கப்பூர், இந்தியா - மர்த்தினி... இந்த தூர வித்தியாசத்தைக் கவனியுங்கள். தூரம் குறைவு என்பதால் சிங்கப்பூர், இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டோடு தொடர்புகொள்ள வாய்ப்பு அதிகம். இதனால் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் பண்பாடு ஏறத்தாழ சமமாயிருக்கும். தூரம் அதிகரிக்கும்போது தமிழ்மொழி, தமிழ் பண்பாடு ஆகியவை குறைகிறது.
ரீயூனியன் தீவு மொரிஷியஸ் அருகில் உள்ளதால், அதன் தாக்கம் உண்டு. இந்திய, தமிழ் பண்பாடு வளர்ச்சி, தமிழர் வாழும் மற்ற பிரெஞ்சு பகுதிகளில் இந்த அளவு இருக்காது. அரசியல் ரீதியில் ரெயினியன், மத்தினி போன்றவற்றில் ஒரே நிலைதான்.
சென்றடைந்த நாடுகளின் மொழிக்கொள்கை அடுத்த காரணம். மொரிஷியஸ், மலேசியா, சிங்கப்பூர் உள்பட சில நாடுகளில் பன்மொழிக் கொள்கை உண்டு. பிரெஞ்சு பகுதியில் பன்மொழிக் கொள்கை இல்லை. புலம் பெயர்ந்த மக்கள்தொகையைப் பொறுத்தும் இது மாறுபடும். மலேசியாவில் தமிழர் அளவு 10%, தென் ஆப்பிரிக்காவில் 2% (விழுக்காடு குறைவு என்றாலும்கூட, அங்கு 3 லட்சம் தமிழர்கள்), சிங்கப்பூரில் 7%, மொரிஷியசில் 8%, பிஜித்தீவுகளில் 5%, மர்த்தினியில் 5-6 % (அதாவது 13000 தமிழர்கள்), ரீயூனியனில் 33% தமிழர்கள்.
மக்கள் தொகையில் தமிழர் அளவு சிங்கப்பூரை விட அதிகமாக இருந்தாலும், ரீயூனியன் பிரான்சை சார்ந்தது. கடந்த 5, 6 ஆண்டுகளாக இந்தப் பகுதி இந்திய அரசாங்கத்தோடு தொடர்பில் இருக்கிறது.
இலங்கையின் ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்று. சிங்கப்பூரின் 4 ஆட்சிமொழிகளில் தமிழும் உண்டு. மலேசியாவில் ஆட்சிமொழியாக இல்லாவிட்டாலும் பள்ளி, பல்கலைக்கழகங்களில் பராம்பரியமாகக் கற்றுத் தரப்படும் மொழியாக இருக்கிறது தமிழ். மொரிஷியசிலுள்ள 5 இந்திய மொழிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் உண்டு.தென் ஆப்பிரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்தோர் தமிழ் மொழியை தக்க வைக்க காரணிகளை உருவாக்கியுள்ளனர். பயன்பாடு இல்லாத மொழியை தக்க வைக்க முடியாது. சிங்கப்பூரில் பயன்பாடு, அரசியல் அங்கீகாரம் இருந்தாலும்கூட, தமிழ்க் குழந்தைகள் ஆங்கிலமே படிக்கிறார்கள். அங்கே வீட்டுமொழியாகத்தான் தமிழ் இடம்பிடித்திருக்கிறது.
தமிழர் என எப்படி அடையாளம் காணப்படுகிறது? இவை எல்லாம் சிறு தீவுகள். இருந்தாலும் 'நான் இந்தியன்', 'நான் சீனாக்காரன்' என்ற உணர்வு அவரவர்க்கு இருக்கிறது. இந்தியாவில் ஜாதி உணர்வு, ஊர்காரன் போன்ற பாகுபாடு இருப்பதுபோலதான்... பலநாட்டு மக்கள் வாழும் பகுதியிலும் இது உண்டு. உடை மூலம் அடையாளம் காணமுடியும். தீபாவளி போன்ற பண்டிகைகளில் பெண்கள் புடவை, பொட்டு அணிந்து காணப்படுவார்கள். இங்குள்ள ஆண்களுக்கு அப்படி அடையாளம் இல்லை. மதச்சடங்கு, வீட்டுச் சடங்கு செய்யக்கூடிய இடங்களில்தான் தமிழ்ப் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. மாரியம்மன் வழிபாடு, சடங்குகளில், பண்பாட்டுச் செயல்பாடுகளில் தமிழ் உள்ளது. இதை மதம் சார்ந்ததாக பார்க்கக்கூடாது. பண்பாட்டுக் காரணியாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், சட்டப்படி அவர்கள் கத்தோலிக்கர்கள்தான். ஞாயிறு அன்று சர்ச்சுக்குப் போவார்கள். உடல்நிலை சரியில்லை, குழந்தை வேண்டுதல் போன்ற காரணங்கள் இருந்தால் மாரியம்மன் கோயிலில் வழிபாடு செய்வார்கள்.
தமிழ்நாட்டில் உள்ளதைப் போல, இங்குள்ள மாரியம்மன் கோயில் கோபுரத்தோடு இருக்காது. ஒரு கொட்டகைதான்... மேலே தகரக்கூரை இருக்கும். கல்லுக்கு புடவைகட்டி, பொட்டு வைத்து மாரியம்மனாக வழிபடுவார்கள். வெள்ளை வேட்டி கட்டி காத்தவராயனாக வணங்குவார்கள். நிச்சயமாக பண்பாடு சார்ந்ததுதான் இது. இங்கு கொண்டாடப்படும் விழாக்கள் எல்லாம் கலாசாரம் சம்பந்தப்பட்டவையே.
ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு வித பழக்கம். ரீயூனியனில் ண்டுக்கு 6-7 முறை தீமிதி விழா நடத்துவார்கள். மொரிஷியசில் காவடி எடுப்பார்கள்... மாசி மகம் கொண்டாடுவார்கள். மர்த்தினியில் தீமிதி இல்லை... கரகம் உண்டு. டுபலி, கோழிபலி... எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம்.
பலியிட்டு வழங்குதல் பற்றி மாறுபட்ட கருத்துகள் வருகின்றன. காரணம் சான்ஸ்கிரிட்டிஷேன் என்கிற சமஸ்கிருதமயமாக்கல் இந்தப் பகுதிகளில் திணிக்கப்படுவதுதான். அவர்கள் பலிகொடுப்பதை மிருகத்தனம், காட்டுமிராண்டித்தனம் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். ரீயூனியனில் பலி கொடுத்து வணங்குவதற்கு தனி கோயில், தனி இடம் ஏற்பட்டுவிட்டது. சிவன், விஷ்ணு கடவுளர்கள் அடங்கிய கோயில்களும் உண்டு.
இந்த மக்களுக்கு தமிழ் மொழியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த வாய்ப்பில்லை. எல்லாவற்றுக்கும் பிரெஞ்சுதான் தேவைப்படுகிறது. விழாக்காலங்களில் பாட்டு பாடவும், 'சாமி வந்தவர்கள்' மற்றவர் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் தமிழ்தான் தேவை.
ரீயூனியனில் கோயிலில் பாடப்படும் தமிழ் பாடல்களுக்கு பொருள் புரியும். மர்த்தினியில் என்னவென்று விளங்காமலே பாடுவார்கள். சூடம் ஏற்றும்போதும் கூட பாட்டு உண்டு. மாரியம்மனுக்கு தாலாட்டுப் பாட்டும் உண்டு. பிரெஞ்சு பகுதிகளில் தெருக்கூத்து நிக்கிய நிகழ்வாக இருக்கிறது. விழாக்காலங்களில் தெருக்கூத்து பார்ப்பார்கள். லவகுசங்கன், நல்ல தங்காள், ராஜா தேசிங்கு கியவை கூத்தாக நடத்தப்படும்.
இந்தியாவில் அச்சுத்தொழில் வளர்ச்சிப்பெற்ற காலகட்டத்தில் 1930, 40-களில் வெளியிடப்பட்ட சிறு புத்தகங்கள் எடுத்துப் போயிருக்கிறார்கள். இன்னும் பத்திரமாக பாதுகாக்கிறார்கள். அவற்றிலுள்ள கதையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு தெருக்கூத்து போலவேதான் இங்கும் நடத்தப்படுகிறது. கட்டியக்காரன், மத்தளக்காரன், ஆர்மோனியக் காரன் எல்லாம் உண்டு. திரை கட்டி, முதலில் கட்டியக்காரன் வந்து கதை சொல்கிறான். விநாயகர் வேசத்தில் ஒருவர் துதிக்கை மாட்டி வருவார். விநாயகர் பூஜை நடக்கும். உடுப்பு, வேடம் உள்பட எல்லாம் தமிழ்நாட்டில் உள்ளதைப் போலவேதான். இந்தக் கலைஞர்கள் நினைவில் உள்ளதை திரும்பத் திரும்ப செய்து வருகிறார்கள். வாய்வழியாக அடுத்த தலைமுறைக்குச் செலுத்தப்படுகிறது இந்தக்கலை.
கிரேயோல் மொழி தாக்கமும் இதில் உண்டு. சபையில் உள்ளவர்களுக்கு விளங்குவதற்காக கிரேயோல் மொழியில் விளக்கம் தருகிறார்கள். கட்டியக்காரர்கள் நாடுநடப்புகளை நையாண்டி செய்யும் பகுதி தமிழ்நாட்டில் நன்கு வளர்ச்சியடைந்து உள்ளது. இங்கே இன்னும் பழைய முறையே இருக்கிறது. பெரும்பாலும் மர்த்தினியில் லவகுசங்கா கூத்தும், ரீயூனியனில் மகாபாரதம், ராமாயணமும், மொரிஷியசில் ராஜா தேசிங்கு, நல்லதங்காள் கதைகளும் கூத்தாக நிகழ்கின்றன.
ஒரே சமூக சூழ்நிலையிலிருந்து வந்தவர்கள் என்பதால் இந்தக் கதைகள் அவர்களுக்குத் தெரியும். தெரியாதவர்களுக்கும் புரியும். கான் சாகிப் கதை கூட கூத்தாக நடத்தப்படுகிறது. இப்போது கூத்து நடத்துவது குறைந்து வருகிறது.
கிரேயோல் மொழிக்கும் பராம்பரிய வரலாறு உண்டு. தோட்ட முதலாளி பேசும் மொழி தொழிலாளிக்குப் புரியாதில்லையா? புரிதலுக்காக இந்திய, ப்பிரிக்க, பிரெஞ்சு கலப்பு மொழி - கிரேயோல் மொழியாக உருவானதுதான் கிரேயோல். பெரும்பாலான சொற்கள் பிரெஞ்சுதான். இலக்கணம் எளிமையாக இருக்கும். 'நான் காப்பி முடிச்சேன்' என்றால் 'குடிச்சேன்' என்றுதான் பொருள். இதில் இப்போது அகராதி கூட வெளிவந்துள்ளது. பாரதியார் கவிதைகள் கிரெயோல் மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொன்னால், தமிழர்கள் பிரெஞ்சு பேசுவதுபோலதான் கிரேயோல் மொழியும் ஆனால் எளிதில் விளங்கும்.செஷல்ஸ் நாட்டில் கிரேயோல் பயிற்று மொழியாக உள்ளது. பிரெஞ்சிலும் பாட மொழியாக உள்ளது. இதில் இலக்கியமும் உண்டு. மகாபாரதம், ராமாயணம் ஆகியவை கூட கிரேயோல் மொழியில் உண்டு.
மாரியம்மன் வழிபாட்டு முறை... இங்கு கிராம பூசாரி போலதான்... ஈடுபாடுள்ள யார் வேண்டுமானாலும் பூசாரி ஆகலாம். சொந்த ஆர்வத்தில் பெரியவர்கள் செய்வதைப் பார்த்து சிஷ்யனைப் போல கற்றுக்கொள்கிறார்கள்... பூசாரி ஆகிறார்கள். மாரியம்மன் கோயில் பூசாரிக்கு அந்தஸ்து உண்டு. மதிப்பும் கவுரவமும் அதிகம். தோட்டத் தொழிலாளி, ஆசிரியர், டிரைவர், மருத்துவ உதவியாளர், எலெக்ட்ரிஷியன் போன்றவர்கள் கூட, ஒய்வு நேரத்தில் பூசாரியாகத் தொண்டு செய்கிறார்கள். யாரும் முழு நேர பூசாரி கிடையாது.
ஏதாவது பிரச்னை என பூசாரியிடம் போனால், 'கவலைப்படாதே. மாரியம்மனுக்கு விழா எடுப்போம்' என்று சொல்வார். அதற்கு ஏற்பாடு செய்வார். இந்தியத் தொடர்பு அதிகம் உள்ள மொரிஷியஸ், ரீயூனியன் தீவுகளில் பூசாரி திருமணப் பொருத்தம், ஜாதகம், பஞ்சாங்கம் பார்ப்பதும் உண்டு.
நன்றிக்கடன் கொடுக்க விரும்புபவர் 40 நாள் விரதம் இருக்கவேண்டும். கோடை காலத்தில் விழா. ஜுன் முதல் செப்டம்பரில் பூசாரியும் விரதம் இருப்பார். மது மாது மாமிசம் கிடையாது. தீட்டு இருந்தால் தெய்வம் தண்டிக்கும் என்பது நம்பிக்கை. முன்பெல்லாம் 3 ஆடுகளை பலி கொடுப்பதே வழக்கம். இப்போது நிறைய பணம் இருப்பதால் 20, 30 ஆடுகள் கூட பலி கொடுக்கிறார்கள்.
மர்த்தினியில் இறந்த சடங்குகள், கருமாதி, மாரியம்மனுக்கு நன்றிக்கடன் விழா ஆகியவை தமிழ் மரபுப்படி நடந்து வருகிறது. இப்போது முடிஎடுத்தல் குறைந்து வருகிறது. பெண்கள் வயதுக்கு வந்தவுடன் விழா எடுப்பது சில இடங்களில் உண்டு.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இங்கேயும் உண்டு. தேதி, நட்சத்திரப்படி பெயர் வைப்பது ஒரு உதாரணம். 20 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பெயர்கள் அதிகம். இப்போது நட்சத்திரத்துக்கு உகந்த எழுத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ளது.
மொரிஷியசில் 72% இந்தியர்கள்... 8% தமிழர்கள். ஆகவே அரசாங்கம் இந்தியர்கள் கையில். பொருளாதாரம் வெள்ளைக்கார தோட்ட முதலாளிகள் கையில். தமிழர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு. சொந்த உழைப்பினாலும், ஆங்கிலேயேரிடம் இருந்த செல்வாக்கினாலும் நன்கு வளர்ந்தார்கள். படிப்பு, வேலை, சொத்து சேர்ப்பது என எல்லா விஷயத்திலும் தமிழர்கள் முன்னேற்றம் அடைந்தார்கள். தோட்டத் தொழிலாளிகளாக இருந்து, பிறகு தோட்டங்களையும் வாங்கினார்கள்.
மொரிஷியசில் முதன்முதலாக பயிற்றுவிக்கப்பட்ட இந்திய மொழி - தமிழ். அச்சேறிய முதல் இந்திய மொழியும் இதுதான். வக்கீல், அக்கவுண்டண்ட் போன்ற ஒயிட் காலர் ஜாப்களில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். மொரிஷியசில் வேலைவாய்ப்பு குறைவு என்பதால், படித்தவர்கள் அங்கிருந்து புலம் பெயர்கிறார்கள்.
அரசியல், சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு பாடுபட்டவர்கள் என்பதால் தமிழர்களுக்கு நல்ல அங்கீகாரம் உண்டு. ரூபாய் நோட்டுகளில் இரண்டாவது இடத்தில் பொறிக்கப்பட்டிருந்த தமிழ் மொழி எந்தக் காரணமும் இல்லாமல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டதால், 1998-ல் கலவரம் ஏற்பட்டது. மந்திரி சபையிலிருந்த 2, 3 தமிழர்கள் ராஜினாமா மிரட்டல் விடுத்தனர். ரூபாய் நோட்டில் மீண்டும் இரண்டாவது இடம் பிடித்தது தமிழ். பிரச்னைக்குரிய ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டன.
ஒவ்வொரு மொரிஷியனும் முன்னோர் மொழியை படிக்க வாய்ப்புண்டு. பெயரைப் பார்த்தே 'தமிழ் படி' என்று சொல்வார்கள். 5 இந்திய மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன். பத்திரிகைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இப்போது அவை குறைந்துள்ளன. ஒளி என்ற பெயரில் கோயில் கட்டமைப்பின் மாதப் பத்திரிகை வெளிவருகிறது.
மொரிஷியசில் சுதந்திரத்துக்கு முன்பிருந்ததோடு ஒப்பிடும்போது, மொழிப்பற்று இப்போது குறைவே. தமிழ்க்கோயில்கள் 300 இருக்கின்றன. இந்திய மூஸ்லிம்களும் இருக்கிறார்கள். 1. வட இந்திய இந்துகள், 2. வட இந்திய மூஸ்லிம்கள் 3. தென் இந்திய தமிழர்கள் என 3 விதமாக மொரிஷியசுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களைப் பிரிக்கலாம். மொரிஷியசில் 'இந்து' என்றால் வட இந்தியர்கள். தென் இந்திய இந்துகள் தமிழர் என்றே அழைக்கப்படுகின்றனர். தமிழ் மதம் என்ற பிரிவே உருவாகிவிட்டது. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் மதம் என்ற கருத்து தாக்கம் இங்கே உள்ளது.
மொரிஷியஸ் தமிழர்கள் எழுதிய புத்தகங்கள் சென்னையிலும், தஞ்சாவூரிலும் அச்சிடப்பட்டு கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 1964-65 களில் இங்கு வெளிவந்த பத்திரிகைகளில் காமராஜர், அண்ணாதுரை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன,
இங்குள்ள தமிழ் கோயில்களுக்குக் கொடி உண்டு. அதில் கறுப்பு-சிவப்பு கொடி உண்டு. இதை தமிழ் கொடியாக கருதுகிறார்கள். உதயசூரியன், கறுப்பு-சிவப்பு, அண்ணாதுரை ஆகியவை தமிழ் அடையாளங்களாகக் கருதப்பட்டு இங்கே வளர்க்கப்படுகின்றன. உதயசூரியன் ஒற்றுமை சங்கம் என்ற அமைப்பு இருக்கும். உதயசூரியன் ஃபுட்பால் கிளப் என்றால் தமிழர்கள் நடத்துகிற தமிழர்களுக்கான விளையாட்டு அமைப்பு. இதற்கு எல்லாம் கட்சி அரசியல், ஜாதி, மத அடையாளங்கள் கிடையாது. இரும்புக்கதவுகளில் கூட இரண்டு மலைகளுக்கு மத்தியில் சூரியன் வருவதுபோல வரையப்பட்டிருக்கும்.
நீண்டகாலமாக மர்த்தினிக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. இப்போது இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஓம்... இது இந்தியர்களுக்குச் சொந்தமான விஷயம். ஆனால், வடமொழி ஓம்தான் மர்த்தினி காரர்களுக்குத் தெரியும். வடமொழி ஒம் எழுத்தையே தமிழ் என நினைக்கிறார்கள். அவர்கள் இந்தியமயமாக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் இந்தியா என்றால் தமிழ்... தமிழ்தான் இந்தியா என்று நினைக்கிறார்கள். வித்தியாசம் புரிவதில்லை.
'மாரியம்மன் விழா கொடூரமாக இருக்கிறது, காட்டுமிராண்டித்தனமாக உள்ளது' என்று கூறி வேதங்களைக் கோண்டுவந்து சமஸ்கிருத மயமாக்குகிறார்கள். இந்தியாவில் தன் சமூகம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக சிறுசிறு சாதிகள் சமஸ்கிருதத்தை விரும்பிப் போகிறார்கள். புலம்பெயர்ந்த பகுதிகளில் விருப்பமில்லாதவர்களுக்கும் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது. இதனால் தமிழ் அழியும் சூழ்நிலை ஏற்படுகிறது.
'தமிழ் விழா, தமிழ் பண்பாடு என்பது சாத்தானின் விஷயம். செய்யக்கூடாது. மீறிச்செய்தால் கிறிஸ்துவக் கோயிலுக்கு வரக்கூடாது' என்று முன்பு கிறிஸ்தவ பாதிரிகள் பயமுறுத்தி வைத்திருந்தார்கள். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மாரியம்மன் கோவில் போவார்களே... அதைத் தடுக்கவே இப்படி ஒரு மிரட்டல்.
இப்போது பிராமணிய அடிப்படையில்தான் சடங்குகளைச் செய்யவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள் வேறு சிலர். இதனால் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் பட்ச பண்பாட்டிலேயே இருக்க வைக்கப்படுகிறார்கள்.
'டு பலி கொடு' என்று கடவுள் கேட்டாரா... அல்லது 'கொடுக்காதே' என்று சொன்னரா? இல்லையே. சமஸ்கிகிருதம்தான் கேட்டாரா? இல்லையே. ஏற்கனவே தாழ்வுமனப்பான்மையோடு இருக்கிறவர்களை இன்னும் சின்னாபின்னமாக்கும் முயற்சி இது. ஆகவே, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உங்களால் முடிந்த அளவு, தெரிந்த முறையில் செய்யுங்கள் என்பேன் நான்.
மர்த்தினி தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை அதிகம். இதைப் பயன்படுத்தி, 'ஆடு பலி கொடுக்காதீங்க... தமிழில் பூஜை செய்யாதீர்கள். சமஸ்கிருதத்தில் செய்யுங்கள்' என்று பிராமணியம் பரப்பப்படுகிறது. இதற்காக டிரினிடாட்டிலிருந்து வரும் மிஷினரி 3 வாரம் பயிற்சிகொடுத்து பிராமணர்களாக மாற்றுகிறார்கள்! வெள்ளை உடை, பூணூல் அணிந்து பிராமணன் ஆகி பூஜை செய்யலாமாம். குறிப்பிட்ட சமுதாயத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்கிறார்கள் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.
மர்த்தினியில் இருப்பவர்கள் பிரெஞ்சு, மொரிஷியஸ் காரர்களே... ஆனாலும், இந்திய பண்பாடு அடிமட்டத்தில் இருக்கிறது. அவர்கள் இந்தியத்தன்மை இழக்காமல், தமிழ் தன்மையோடு இருக்கவே விரும்புகிறார்கள். படித்தவர்களாக, சமுதாயத்தில் மேல்நிலை அடைந்தவர்களாக இருக்கிறார்கள்.
'முன்னோர்கள் அளித்தவை முக்கியம். அதை இழந்துவிடக்கூடாது' என்கிறவர்களும் இருக்கிறார்கள். 'முன்னோர்கள் அளித்தது காட்டுமிராண்டித்தனம்' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் ஏற்கனவே பிரிந்துபோயிருப்பவர்களை இன்னும் பிரிக்கும்விதத்தில் நடந்துகொள்வதா? அல்லது பிரிந்து போயிருக்கலாம்... ஆனால் சமுதாய முன்னேற்றம் அடைய வேண்டுமே என்பது ஒரு கேள்வி. சிந்தியுங்கள்!"