மதியம் சனி, ஆகஸ்ட் 18, 2007

படத்துக்குள் படத்துக்குள் படம் - எப்படி செய்தார்கள்?




முதல் கேள்வி கேட்ட முத்துலெட்சுமி அவர்களுக்கு நன்றி.

சில நாட்களுக்கு முன் 'படம் காட்டுறாங்கோ' என்றொரு புகைப்படப் பதிவு போட்டிருந்தேன். ஒரு படத்துக்குள் அதே படம்... அதற்குள் அதே படம்... இப்படி படத்துக்குள் படத்துக்குள் படத்துக்குள் படம் இருக்கிற படங்கள் அவை. இதை எப்படி செய்தார்கள் என்று விளக்கம் சொல்ல முடியுமா என்று கேட்டிருக்கிறார் பதிவர் முத்துலெட்சுமி

இதோ தருகிறேன் விளக்கம்...

எனக்கு இதுபோன்ற படங்களில் ஆர்வம் வரக் காரணம் ஆனந்த விகடனிலும், துளிர் என்ற அறிவியல் இதழிலும் வெளிவந்த இரண்டு அட்டைப்படங்கள்தான். விகடனில் அதே விகடன் படிப்பது போல பல ஆண்டுகளுக்கு முன் வந்த படம் அது. ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் ஐடியாவில், புகைப்படக்கலைஞர் ரவிசங்கர் எடுத்த படங்களைக்கொண்டு அந்த அட்டைப்படத்தை உருவாக்கினார்கள்.
முதல் படத்தை எடுத்த தூரத்தைவிட, அதன் உள்ளே இருக்கும் இரண்டாம் படத்தை எடுக்க இன்னும் சில அடிகள் பின்னுக்குப் போனார் போட்டோகிராபர். அடுத்த படத்துக்கு இன்னும் சில அடிகள். இப்படியே...
அதன்பின் முதல் படத்தில் எந்த இடத்தில் இரண்டாம் படம் வர வேண்டுமே அந்த இடத்துக்குத் தகுந்தாற்போல, போட்டோபிரிண்ட் போட்டு ஒட்டி, அதைப்போல மூன்றாம் படம். இப்படியே கடைசி வரை முடித்த போது அது ஒரே படமாக இருந்தது. அதை ஸ்கேன் செய்து அட்டையாக்கினார்கள்.

இப்போது இவ்வளவு மெனக்கிட வேண்டியதில்லை. ஒரே ஒரு டிஜிட்டல் படம் இருந்தால், ஐந்தே நிமிடங்களில் ப.ப.ப. படம் உருவாக்கி விடலாம். ரொம்பவும் ஈஸி!

போட்டோஷாப் ஓபன் செய்துகொள்ளுங்கள். படத்தை அதில் திறந்துகொள்ளுங்கள். அப்புறம் அந்தப்படத்தை இன்னொரு 'காபி' எடுத்துகொள்ளுங்கள். முதல் படத்தில் எந்த இடத்தில் அதே படம் வர வேண்டுமோ, அங்கே ஜும் செய்துகொள்ளுங்கள். காபி செய்து வைத்துள்ள படத்தை அங்கே பேஸ்ட் செய்யுங்கள். சரியாகப் பொருந்துகிற வகையில், பிசிறுகளை டூல்களைப் பயன்படுத்தி நேர்த்தியாக்குங்கள். இப்போது ஸேவ் செய்துவிட்டு, அந்தப் படத்தை காபி பண்ணுங்கள். முதல் படத்தின் உள் படத்தை ஜும் செய்து, காபி செய்த படத்தை நேர்த்தியாக பேஸ்ட் செய்யுங்கள். இப்படியே தொடர்ந்தால் படத்துக்குள் படத்துக்குள் படத்துக்குள் படம்.

இப்படி நீங்கள் செய்த படங்களை பின்னூட்ட இணைப்பு கொடுத்து இதே பக்கத்திலும் இணைக்கலாம்.

அட்வான்ஸ் வாழ்த்துகளும், பாராட்டுகளும்!